internet

img

கோவிட்19 பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு - சிபிஐ எச்சரிக்கை

கோவிட் -19 பெயரில், ஹேக்கர்கள் நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவதாக சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோவிட்-19 பெயரில், வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்படுகிறது என்று இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்கள் முதலில், கோவிட் தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட லிங்க்கை பதிவிறக்கம் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதாகவும், குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கம் செய்தால், கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகை செலுத்தப்படும் என்றும் குறுந்தகவல் மூலம் தீங்கு விளைவிக்கும் லிங்கை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர்.

அந்த லிங்க்கை பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள ‘செர்பரஸ் ட்ரோஜன்’ (Cerberus Trojan) எனும் இணையதள வைரஸ், கணினி அல்லது செல்போனில் புகுந்து, பயனரின் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களையும் எளிதாக திருடி, வங்கியில் இருந்து பணம் திருடுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே கோவிட்-19 பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத லிங்க் அல்லது செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சிபிஐ எச்சரித்துள்ளது.